சீனாவுக்கு ‘செக்’ வைப்பதே மோடியின் பயணத் திட்டம் – இந்திய ஊடகம்
இந்தியப் பெருங்கடல் நாடுகளுடன் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம், சிறிலங்கா உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இந்தியாவின் டெக்கான் ஹெரால்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்தமாத நடுப்பகுதியில், சிறிலங்கா, மாலைதீவு, செஷெல்ஸ், மொரிசியஸ் ஆகிய நான்கு நாடுகளுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியப் பெருங்கடல் நாடுகளான, சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுடன் கொண்டுள்ள கடல்சார் ஒத்துழைப்பை, மொரிசியஸ், செஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கும் விரிவாக்கிக் கொள்வதற்கு இந்தியா எதிர்பார்க்கிறது.
நரேந்திர மோடியின் இந்தப் பயணம் இந்த நாடுகளுடன் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கு பயன்படுத்தப்படவுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், சீனாவின் அதிகரித்து வரும், மூலோபாயத் தலையீடுகளைத் தடுத்து நிறுத்துவதே, இந்தியாவின் இந்த நகர்வின் வெளிப்படையான நோக்கமாக கருதப்படுகிறது.