தனது அதிகாரங்கள் குறைக்கப்படவில்லை என்கிறார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
பாதுகாப்பு அமைச்சில் தனது அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக, ஊடகங்களில் வெளியான செய்திகளை சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன மறுத்துள்ளார்.
பிபிசி சிங்கள சேவைக்கு அளித்த செவ்வியில் அவர், பாதுகாப்பு அமைச்சின் நான்கு துறைகளை நிர்வகிக்கும் பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலைக் கொண்டு, தனது சிறகுகள் சிறிலங்கா அதிபரால் வெட்டப்பட்டு விட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் தன்மீது நம்பிக்கை வைத்து பல விடயங்களை ஒதுக்கியுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
கடந்த 10ம் நாள் வெளியிடப்பட்ட அதிசிறப்பு வர்த்த்மானி அறிவித்தலில், பாதுகாப்பு அமைச்சரின் கீழ் உள்ள 14 துறைகளில், 4 துறைகளை மட்டும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கீழ் கொண்டு வருவதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார்.
நான்கு துறைகளை மட்டும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் ஒப்படைத்து விட்டு, முக்கியமான ஏனைய 10 துறைகளையும் மைத்திரிபால சிறிசேன தன்வசம் வைத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மகன் லெப்.யோசித ராஜபக்ச எவ்வாறு கடற்படையில் இணைந்து கொண்டார் என்பது தொடர்பாக சிறிலங்கா கடற்படைத் தளபதி விசாரணை ஒன்றை நடத்தி வருகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது தந்தை மகிநத ராஜபக்சவின் பாதுகாப்பு விவகாரங்களைக் கையாள்வதற்குப் பொறுப்பாக தன்னை நியமிக்குமாறு, லெப். யோசித ராஜபக்ச கோரியுள்ளதாகவும், அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் ருவான் விஜேவர்த்தன கூறியுள்ளார்.