பிரபாகரனின் செவ்வியுடன் வெளியான புரொன்ட்லைன் இதழ்களை விடுவிக்க ரணில் உத்தரவு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த புரொன்ட்லைன் இதழ்களை விடுவிக்குமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
1987ம் ஆண்டு வெளியான விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் செவ்வியை மறுபிரசுரம் செய்திருந்த புரொன்ட்லைன் இதழ்களை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தடுத்து வைத்திருந்தனர்.
புரொன்ட்லைன் சஞ்சிகை தனது 30வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், கடந்த 30 ஆண்டுகளில் வெளியான முக்கியமான செவ்விகளை இந்த இதழில் வெளியிட்டிருந்த்து.
இதில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் செவ்வியும் ஒன்றாகும்.
இந்த செவ்வியைக் காரணம் காட்டி சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த புரொன்ட்லைன் இதழ்களை விடுவிக்குமாறு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த செவ்வி நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது என்று சிறிலங்கா பிரதமர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமைகள் ஏற்பட்டால், அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெறுமாறும் சுங்கத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள 187 புரொன்ட்லைன் இதழ் பிரதிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு உரிமைகேரி யாரும் வரவில்லை என்றும், சுங்கத் திணைக்களப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.