அறிக்கை ஒத்திவைப்பு கவலையோ, மகிழ்ச்சியோ இல்லை – இரா.சம்பந்தன்
ஐ.நாவின் விசாரணை அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடுவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை எடுத்துள்ள தீர்மானம், தமக்கு கவலையையோ அல்லது மகிழ்ச்சியையோ அளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் புதிய அரசாங்கம், ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடத்துவதாக உறுதியளித்து, விசாரணை அறிக்கையை வெளியிடுவதை ஒத்திவைக்கக் கோரியிருந்தது.
எனினும், அறிக்கை ஏற்கனவே திட்டமிட்டவாறு வெளியிடப்பட வேண்டும், உண்மைகள் வெளிவர வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருக்கிறது.
இதனை நாம், ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு எழுதியுள்ள கடிதத்திலும், குறிப்பிட்டுள்ளோம்.
அதேவேளை, இந்த விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு என்பது, இந்த இடைப்பட்ட காலத்தில் மேலும் புதிய விடயங்களை விசாரணைக் குழுவின் முன்னால் வைக்கவும் வழிவகுக்கலாம்.
எனவே இந்த காலகட்டத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துழைப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.