சிறிலங்காவின் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் அமெரிக்க போர்க்குற்ற நிபுணர்
அனைத்துலக சமூகத்தினால் மதிக்கப்படும் நிலைமைக்கு சிறிலங்கா மீண்டும் வந்துள்ளதாக அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலர் அன்ரனி ஜே பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“நல்லாட்சிக்கான மாற்றத்தை ஏற்படுத்த, யாழ்ப்பாணத்தில் இருந்து காலி வரையான இலங்கையர்கள் தேர்தலின் மூலம் தெளிவான செய்தியை வழங்கியுள்ளனர்.
இறுதியான சமாதானத்தை அடைய உங்கள் நாடு முன்நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.
இந்த ஆண்டு சிறிலங்காவுடன் இணைந்து முழு உலகமுமே அதன் தேசிய நாளைக் கொண்டாடுகிறது.
மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவியேற்று நான்கு வாரங்கள் கூட ஆகவில்லை.
ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கப்பட்டுள்ளதுடன், எல்லா இலங்கையர்களினதும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் நடந்த சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களையும் காண முடிந்தது.
போரினால் ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்தும் முயற்சிகளை சிறிலங்கா நிறுத்தக் கூடாது.
ஜனநாயக சுதந்திரத்தையும் அரசியல் உரிமைகளையும் விரிவாக்கிக் கொள்ளும், ஊழலைத் தடுக்கும், நிதிக் குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்கு, பொருளாதார வளர்ச்சிக்கு சிறிலங்காவின் முயற்சிகளுக்கு நாம் உதவத் தயாராக இருக்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில், தெற்கு, மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், தெற்கு, மத்திய ஆசியாவுக்கான பிரதி இராஜாங்கச் செயலர் அதுல் கெசாப், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்கத் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.