ஜெனிவாவில் புதிய திட்டத்தை முன்வைக்கிறது அமெரிக்கா? – நிஷாவின் பயணத்தில் தெரியவரும்.
சிறிலங்கா விவகாரம் தொடர்பாக ஜெனிவாவில் புதிய திட்டம் ஒன்றை முன்வைக்க அமெரிக்கா தயாராகி வருவதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.
மார்ச் 2ம் நாள் தொடக்கம், 27ம் நாள் வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட,போர்க்குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
இந்தநிலையில், சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு, ஜெனிவா கூட்டத்தொடரில் புதிய திட்டம் ஒன்றை முன்வைப்பதற்கான பணிகளில் அமெரிக்க அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் புதிய ஒழுங்குகள் தொடர்பாக, நாளை கொழும்பு வரும் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், சிறிலங்கா அரசாங்கத்துடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.