மோடியின் கொழும்பு வருகையை அடுத்து சீனா செல்கிறார் மைத்திரி
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தையடுத்து, சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா அதிபராகப் பதவியேற்ற பின்னர், தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ளார்.
அடுத்தமாதம் 11ம் நாளுக்கும் 15ம் நாளுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், அவர் புதுடெல்லிக்குப் பயணிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இந்தக் காலப் பகுதிக்குள், சிறிலங்கா அதிபரின் பயணத்தை ஒழுங்கு செய்யுமாறு இந்தியத் தரப்புக்கு, சிறிலங்கா அரசாங்கத்தினால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறிக்கப்பட்ட காலப்பகுதிக்குள், இந்திய பிரதமரினால் சந்திப்பில் பங்கேற்க முடியுமா என்பது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பயணத்தையடுத்து, வரும் மார்ச் மாதம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தநிலையில், இந்திய பிரதமரின் சிறிலங்கா பயணத்துக்குப் பின்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சீனாவுக்கான அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
சீனாவில் நடைபெறவுள்ள மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்கு, வருமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு சீன அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அழைப்பை சிறிலங்கா அதிபர் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பயணத்தின் போது சீன அதிபரைச் சந்தித்து அவர் பேச்சுக்களை நடத்துவார்.
மைத்திரிபால சிறிசேனவின் சீனப் பயணத்தின் போது சீனாவினால் சிறிலங்காவில் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து முக்கியமாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பதாக, கொழும்பு துறைமுக நகரத் திட்டம் குறித்து பேச்சுக்கள் இடம்பெறும் என்று தெரியவருகிறது.