மகிந்தவா – மைத்திரியா ? – பல்கலைக்கழக கருத்துக்கணிப்புகளில் முரண்பாடு
சிறிலங்கா அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் என்று கொழும்பு பல்கலைக்கழகமும், மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுவார் என்று களனிப் பல்கலைக்கழகமும் நடத்திய கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக் கணிப்பில், மைத்திரிபால சிறிசேன 53 வீத வாக்குகளுடன் வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவுக்கு இரண்டு இலட்சம் வாக்குகள் அதிகமாக கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்த 28 வீதமான வாக்காளர்கள், இந்தமுறை மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளதும் இந்தக் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
அதேவேளை 11 வீதமானவர்கள் இன்னமும் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்யாமல் உள்ளனர்.
முதல்முறையாக வாக்களிக்கும், வாக்காளர்களில் 38 வீதமானோர் மகிந்த ராஜபக்சவுக்கும், 33 வீதமானோர் மைத்திரிபாலவுக்கும், வாக்களிக்கப் போவதாக கூறியுள்ளனர்.
13 – 15 வீதமானவர்கள் இன்னமும் யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, களனிப் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக்கணிப்பில், மகிந்த ராஜபக்ச 53 வீத வாக்குகளுடன் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபாலவுக்கு 44 வீத வாக்குகள் கிடைக்கும் என்றும், இந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.