மேலும்

படகுகளைத் தயார் நிலையில் வைத்திருக்க தேர்தல் ஆணையாளர் உத்தரவு

boatசிறிலங்காவில் அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கடுமையான மழை பெய்யும் என்று வானிலை அறிக்கைகள் வெளியாகியிருப்பதால், படகுகளைத் தயார் செய்யும்படி தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்காவில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பெய்யும் மழையால், பெரும்பாலான பகுதிகளில் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன.

பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியிருப்பதால், ஏழு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே ஏற்பட்டுள்ள வெள்ளம் வடியாத நிலையில், மீண்டும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக, வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், பெருவெள்ளம் ஏற்படும் ஆபத்து, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இன்னமும் 13 நாட்களே இருப்பதால், பெருவெள்ளம் ஏற்பட்டால், நிலைமையை சமாளிப்பதற்கு படகுகளைத் தயார் நிலையில் வைத்திருக்கும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கேட்டுக் கொண்டுள்ளார்.

வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்வது, வாக்களிப்பு நிலைய அதிகாரிகளை கொண்டு செல்வது, வாக்களிப்பு முடிந்த பின்னர், வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணும் நிலையத்துக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட தேவைகளுக்கு, படகுகளை பயன்படுத்த தயாராக இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், வெள்ளத்தினால் பாதிக்காத வகையில், வாக்களிப்பு நிலையங்களை உயரமான கட்டடங்களில்  அமைக்கவும் தேரதல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *