ஆழிப்பேரலை: இரண்டரை இலட்சம் பேரை விழுங்கிய இராட்சதன்
இலங்கைத் தீவு உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேரைப் பலிகொண்ட ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
2004ம் ஆண்டு டிசெம்பர் 26ம் நாள் காலை, இந்தோனோசியாவின் சுமாத்ரா பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட 9.3 நிலநடுக்கத்தின் விளைவாக, ஏற்பட்ட ஆழிப்பேரலை, தெற்கு, தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகளின் கரையோரப் பகுதிகளில் கோரத் தாண்டவம் ஆடியது.
ஒரு சில நிமிடங்களுக்குள், 2 இலட்சத்து 30 ஆயிரம் பேரை, இந்த ஆழிப்பேரலை விழுங்கிக் கொண்டது.
மேலும், மில்லியன் கணக்கான மக்களை வீடற்றவர்களாக்கி, நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியது.
இந்த ஆழிப்பேரலையால், ஆயிரக்கணக்கான சிறார்கள் அநாதரவாக்கப்பட்டனர்.
இலங்கையில், ஆழிப்பேரலை 35,322 பேரை பலிவாங்கியதுடன், 21,411 பேர் காயங்களுக்கு உள்ளாகினர். 515,115 பேர், இடம்பெயர்ந்தனர்.
3954 சிறுவர்கள் தமது பெற்றோரை இழந்தனர். இவர்களில் 979 சிறுவர்கள், தமது பெற்றோர் இருவரையும் பறிகொடுத்தனர்.
98 ஆயிரம் வீடுகள் சேதமடைந்ததுடன், 150,000 பேர் தமது வாழ்வாதாரங்களையும் இழந்தனர்.
இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள ஆறு மாவட்டங்களும், ஆழிப்பேரலையால் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்தன.
பேரனர்த்தங்களை ஏற்படுத்திய ஆழிப்பேரலை நிகழ்ந்து, இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இதனை நினைவுகூரும் நிகழ்வுகள் உலகெங்கும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளன.