மேலும்

வடக்கு, கிழக்கில் தேர்தல் களநிலவரங்களை ஆய்வு செய்யும் அமெரிக்கா

eagle-flag-usaவரும் ஜனவரி 8ம் நாள் சிறிலங்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வடக்கிலும், கிழக்கிலும் உள்ள களநிலவரங்களை அறிந்து கொள்ளும் முயற்சியில், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்கத் தூதரக அரசியல் அதிகாரி சந்தீப் குரொஸ் முல்லைத்தீவிலும், திருகோணமலையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஆளும்கட்சி அரசியல்வாதிகளைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

கடந்த 22ம் நாள் கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணியை, அமெரிக்க தூதரக அரசியல் விவகார அதிகாரி சந்தீப் குரொஸ் சந்தித்துப் பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலையில், மேலும் பல அரசியல்வாதிகளையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.

மோசமான காலநிலைக்கும் மத்தியில், அமெரிக்கத் தூதரக அரசியல் விவகார அதிகாரி, இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

அதேவேளை, முல்லைத்தீவில் நேற்றுமுன்தினம் மாகாணசபை உறுப்பினர் ரவிகரனை சந்தீப் குரொஸ் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் புதுக்குடியிருப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இணைப்பாளர் கனகரத்தினத்தையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்புகளின் போது, வரும் அதிபர் தேர்தல் தொடர்பான அவர்களின் நிலைப்பாடு, ஆளும்கட்சி மற்றும் ஏனைய கட்சிகளுடனான கூட்டமைப்பின் உறவுகள், சீனாவுடனான சிறிலங்காவின் உறவுகள் குறித்தும் விசாரித்து அறிந்து கொண்டுள்ளார் அமெரிக்க இராஜதந்திரி.

இந்தச் சந்திப்புகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதரக பேச்சாளர் நிகோல் சுலிக், நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள எல்லா அரசியல் கட்சிகளுடனும், அமெரிக்கத் தூதரகம் கிரமமான முறையில் சந்திப்புகளை நடத்துவது வழக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *