கிராமப்புறங்களில் ஆட்டம் காணத் தொடங்கியுள்ள மகிந்த
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தற்போது கிராமிய மட்டத்தில் ஆதரவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளும்கட்சியின் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அதிகளவில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கத் தொடங்கியுள்ளனர்.
நேற்று அனுராதபுரவில், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் 16 பேர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
சீதாவாக்கை பிரதேசசபையின் ஐந்து உறுப்பினர்களும், மற்றும் அனுராதபுர மாவட்டத்திலுள்ள பிரதேசசபைகளின் 8 உறுப்பினர்களும், வடமத்திய மாகாணசபை உறுப்பினர் பி.பி.திசநாயக்கவும், மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் இணைந்துள்ளனர்.
அதேவேளை, கண்டியில், சிறிலங்கா பிரதமர் எ.எம். ஜெயரட்ணவின் இணைப்புச்செயலாளரும், ஐதேகவில் இணைந்து கொண்டுள்ளார்.
அதேவேளை, தெகிவளை – கல்கிசை மாநகரசபையின் உறுப்பினர் ஒருவர் நேற்று மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க வந்த பின்னர், மனம்மாறி, ஐதேக ஒழுங்கு செய்த கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை புகழ்ந்து விட்டு சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிரணிக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஆளும்கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் தீவிர கண்காணிப்பில் வைத்திருக்கும் நிலையில், ஆளும்கட்சியின் மாகாணசபை, உள்ளூராட்சிசபைகளின் உறுப்பினர்கள் மெல்ல மெல்ல மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
இதனால் கிராமங்களில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவு குறையும் நிலை உருவாகியுள்ளது.