மைத்திரியின் பாதுகாப்புக்கு 45 அதிரடிப்படையினர் – தேர்தல் ஆணையாளர் உத்தரவு
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறும், அவருக்கு 45 சிறப்பு அதிரடிப்படையினரைப் பாதுகாப்புக்கு நியமிக்குமாறும், சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார்.
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பரப்புரை மேடை எரிக்கப்பட்டமை, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை, காரணமாக, அவரது பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தநிலையில், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தேர்தல் ஆணையாளரிடம் கோரியிருந்தார்.
இதற்கமையவே, 45 சிறப்பு அதிரடிப்படையினரை மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புக்கு நியமிக்குமாறு பிரதி காவல்துறை மா அதிபரிடம், தேர்தல் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், இதுதொடர்பான எந்த எழுத்துமூல வழிகாட்டுதலும் தமக்கு வழங்கப்படவில்லை என்று சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பரிய,
“இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் சமமான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
வந்துரம்ப மற்றும் கொலன்னாவவில் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பரப்புரை மேடைகள், தாக்கப்பட்டுள்ளன.
தேர்தல் சட்டங்களின் கீழ் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிகபட்ச பாதுகாப்பை அளிக்குமாறு பிரதி காவல்துறை மா அதிபர் காமினி நவரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.