சிறிலங்காவுக்கான புதிய பிரித்தானியத் தூதுவராக ஜேம்ஸ் டோறிஸ் நியமனம்
சிறிலங்காவுக்கான புதிய தூதுவராக, ஜேம்ஸ் டோறிஸ், நியமிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவராகப் பணியாற்றும், ஜோன் ரன்கின், மற்றொரு இராஜதந்திரப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதையடுத்தே, புதிய தூதுவராக, ஜேம்ஸ் டோறிசின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
புதிய தூதுவர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமது பணிகளைப் பொறுப்பேற்பார் என்று, பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
1995ம் ஆண்டு பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தில் இணைந்த, ஜேம்ஸ் டோறிஸ், பெருவில் 4 ஆண்டுகள் தூதுவராப் பணியாற்றியவர்.
மேலும், ரஸ்யா, கொலம்பியா ஆகிய நாடுகளில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ள இவர், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தில், ஆசிய மற்றும் ஐரோப்பிய விவகாரங்களுக்கான பிரிவிலும் கடமையாற்றியுள்ளார்.