ஹப்புத்தளையில் ஐதேக கூட்டம் மீது ஆளும்கட்சி குண்டர்கள் தாக்குதல் – 5 பேர் காயம்.
பதுளை மாவட்டத்தில் உள்ள ஹப்புத்தளையில், இன்று மாலை எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக ஐதேக நடத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின் மீது ஆளும்கட்சியினர் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
பரப்புரைக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும், ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்னான்டோ ஆகியோர் வருகை தருவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்து ஆலய மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில், வைக்கப்பட்டிருந்த பதாதைகள் மற்றும் அலங்காரங்கள் ஆளும்கட்சியின் குண்டர் குழுவொன்றினால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் அங்கிருந்த ஐதேகவின் ஹப்புத்தளை அமைப்பாளர் சேனாரத் ஜெயசிங்க உள்ளிட்ட 5 பேர் தாக்கப்பட்டு காயமடைந்தனர். இவர்களில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவின் வாகனத்தின் மீதும், தனது வாகனத்தின் மீதும் கற்கள் வீசித் தாக்கப்பட்டதாக, ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
படங்கள் – லங்காதீப