உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை பலப்படுத்துவார் மைத்திரி – ராஜித சேனாரத்ன
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சிறிலங்காவில் அனைத்துலக விசாரணைக்கு ஆதரவு வழங்கமாட்டார் என்றும், ஆனால், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகளைப் பலப்படுத்துவார் என்றும் தெரிவித்துள்ளார், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
மைத்திரிபால சிறிசேனவின் பேச்சாளரான ராஜித சேனாரத்ன, இந்திய நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில், மேலும் கூறியிருப்பதாவது,
“சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால், இந்திய அரசாங்கத்துக்கு கிட்டத்தட்ட இதுபோன்ற வாக்குறுதியே வழங்கப்பட்டது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அதிகாரத்தில் இருக்கும் வரையில் வடக்கிலுள்ள தமிழர்கள் அதிகாரப்பகிர்வை எதிர்பார்க்கமுடியாது.
வடக்கு மக்களுக்கு எதையும் கொடுப்பதற்கு அவர் தயாராக இல்லை.அங்கு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள், தரகுப் பணத்தைப் பெறுவதற்காகவே மேற்கொள்ளப்பட்டன.
அங்குள்ள மக்களுக்கு அந்த அபிவிருத்தி திட்டங்களால் பயன் ஏற்படவில்லை. அவர்களுக்கு அது வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கவில்லை.
இவைபற்றியெல்லாம் அரசாங்கத்தில் இருந்த போது நான் முறைப்பாடு செய்திருந்தேன்.
அரசாங்கத்தில் இருந்த போது சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்காக நான் போராட வேண்டியிருந்தது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூலம் எதையும் செய்ய முடியாது என்றுணர்ந்த நிலையில் தான் அதிலிருந்து வெளியேறினேன்.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தல், தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு, நல்லாட்சி, இந்தியாவில் உள்ளது போன்ற சுதந்திரமான தேர்தல் ஆணையம், பொதுச்சேவைகள் ஆணைக்குழு, நீதித்துறை உள்ளிட்ட மறுசீரமைப்புகள் தான் இப்போது முதன்மைபெற்றுள்ளன.
இவையல்லாவற்றையும் செய்வதாக மகிந்த ராஜபக்ச வாக்குபுறுதி அளித்தார். ஆனால் அதனை அவர் காப்பாற்றவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.