மேலும்

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஈபிடிபியினர் தாக்குதல் – அமைச்சர் ஐங்கரநேசன் உள்ளிட்ட இருவர் காயம்

aingaranesan-injuredயாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மீது, ஈபிடிபியினர் மேற்கொண்ட தாக்குதலில், வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன் உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர்.

யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 9.3௦ மணியளவில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் ஆரம்பமாகியது.

இந்தக் கூட்டத்தில் இணைத்தலைவர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றிய போது, வடமாகாண சபையின் செயற்பாடுகளை  விமர்சித்தார்.

அப்போது மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் குறுக்கிட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அரசியல் குறித்துப் பேசக்கூடாது என்ற தேர்தல் ஆணையாளரின் உத்தரவைச் சுட்டிக்காட்டி எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும், ஈபிடிபி  உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டன.

வடக்கு மாகாணசபை தேர்தலில் பொய்யுரைத்து மக்களை உசுப்பேற்றி வாக்குகளைப் பெற்று தற்போது  அபிவிருத்திகளை மேற்கொள்ளவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விமர்சித்தார்.

அப்போது குறுக்கிட்ட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் வடமாகாணசபைக்கு வெறும் 180 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதை நாம் முற்றுமுழுதாக 99 வீதம் செலவளித்துக் கொண்டிருக்கிறோம் இனியும் செலவளிப்போம் எனத் தெரிவித்தார்.

இதன்போது அமைச்சா டக்ளஸ் தேவானந்தா இணைத்தலைவர்களுக்கு மட்டுமே கருத்து கூற அனுமதியுள்ளது என்றும், இணைத்தலைமைகளுக்கு கட்டுப்பட்டே கூட்டத்திலுள்ளவர்கள் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்ததுடன், தலைமைக்கு கட்டுப்படாதவர்கள் வெளியில் செல்லலாம் என பலமுறை தெரிவித்தார்.

எனினும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இடையில் கருத்து மோதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்றன.

இதனிடையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மாகாணசபை பற்றிக் கதைக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. இது அபிவிருத்தி பற்றிப் பேசுவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டம் எனத் தெரிவித்தார்.

அதற்கு ஈபிடிபி  உறுப்பினர்கள் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் தவராசா வடமாகாண நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரதம செயலாளரிடம் சில விளக்கங்களைக் கேட்டார். அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கூட்டமைப்பினர் கோடி கோடியாகக் கொள்ளையடிப்பதாக, ஈபிடிபி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் வடமாகாண அபிவிருத்திக்காக 180 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 1600 கோடி மீண்டு வரும் செலவீனமாகும் என ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான அனைத்து விபரங்களையும் தெரிவித்தார்.

தற்போது இடம்பெறுவது அபிவிருத்திக் கூட்டம். அரசியலைத் தவிர்த்து மற்ற விடயங்களுக்கு செல்வோம் எனவும் அவர் கூறினார்.

எனினும் கருத்துமோதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்றன.   அரச அதிபர் அனைவரையும் அமைதியாக இருக்குமாறு கோரினார்.

உங்களிடையே கருத்து மோதல்கள் இருக்குமாயின் அது தொடர்பாக கலந்துரையாடலாம். ஆனால் அதற்கான இடம் இதுவல்ல என்றார்.

இந்தக் கூட்டத்தைக் கூட்டியதற்குக் காரணமே யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடவுமே ஆகும்.

முரண்பாடுகளுக்கு இடமளித்தால் அபிவிருத்திகளை மேற்கொள்ளமுடியாது.    ஆகவே அரசியல் தொடர்பான கருத்துக்கள் இந்தக் கூட்டத்தில் கதைக்கப்பட்டால் அரச உத்தியோகத்தர்களாகிய நாம் கூட்டத்தை விட்டு வெளியேறுவோம் என அரச அதிபர் தெரிவித்தார்.

அப்போது டக்ளஸ் தேவானந்தாவும் இணைத்தலைமைக்கு கட்டுப்படாதவர்கள் கூட்டத்தைவிட்டு வெறியேறலாம் என தெரிவித்தார்.

தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் எங்களால் வெளியேறமுடியாது நீங்கள் வேண்டுமானால் வெளியேறுங்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைப் பார்த்து கூறியபோது, ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் ஆவேசமாக அவரது ஒலிவாங்கியைப் பறிக்க முயன்றனர்.

ஒலிவாங்கியை பறிக்கவிடாமல் விவசாய அமைச்சர்  ஐங்கரநேசன் தடுக்க முயன்ற போது அவர் மீது ஈ.பி.டி.பியின் உறுப்பினர்கள் தண்ணீர் போத்தல்களால் வீசித் தாக்கினர்.

இதையடுத்து இருதரப்பினரும், தண்ணீர் போத்தல்களை வீசி தாக்கிக் கொண்டனர்.

இருதரப்பிலும், தகாத வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெற்றதுடன், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதன்போது வடக்கு மாகாண விவசாய அமைச்சர்  ஐங்கரநேசனின் வாயில் காயம் ஏற்பட்டு, இரத்தம் கொட்டியது.

மேலும், மாகாணசபை உறுப்பினர் சர்வேஸ்வரனுக்கும்  காயம் ஏற்பட்டதையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்கள் அனைவரும் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *