சிறிலங்காவை விட்டு வெளியேறி பிரித்தானியாவில் தஞ்சமடைந்தார் ஹிருணிகா
அண்மையில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிறேமச்சந்திர, சிறிலங்காவை விட்டு வெளியேறி, பிரித்தானியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
ஹிருணிகாவுக்கு சிறிலங்கா அரசதரப்பில் இருந்து விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை அடுத்தே அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக, அவரது இணைப்புச்செயலர் தெரிவித்துள்ளார்.
ஹிருணிகாவுடன், அவரது தாயாரான, சுமண பிறேமச்சந்திரவும் பிரித்தானியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்ததையடுத்து, ஹிருணிகாவுக்கு வழங்கப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பு நீக்கப்பட்டதுடன், அவரது வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
அத்துடன் சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் பதவியும் அவரது தாயாரிடம் இருந்து பறிக்கப்பட்டது.
தாம் வசித்து வரும் வீட்டையும் கைப்பற்ற சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்து வருவதாக அவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முன்னர் ஹிருணிகா தெரிவித்திருந்தார்.
ஹிருணிகாவும் தாயாரும் பாதுகாப்புக்காகவே பிரித்தானியா சென்றுள்ளனர்.
எனினும், அவர்கள் அங்கு நிரந்தரமாக தங்கவுள்ளனரா அல்லது உடனடியாக மீளத் திரும்பும் வாய்ப்புகள் உள்ளதா என்பது பற்றிய தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.