நுவரெலிய மாவட்டத்தில் வெறுமையாகும் மகிந்தவின் கூடாரம்
நாடாளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஸ்ணன் எதிரணியின் பக்கம் திரும்பியுள்ளதால், நுவரெலிய மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெரும்பான்மையை இழந்துள்ளது.
கடந்த 2010 நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 5 ஆசனங்களையும், ஐதேக 2 ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தன.
ஆளும்கட்சியின் பட்டியலில் போட்டியிட்ட அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான கூடிய விருப்பு வாக்குகளுடன் தெரிவாகியிருந்தார்.
அவரையடுத்து, கூடுதல் விருப்புவாக்குகளைப் பெற்ற வீ.இராதாகிருஸ்ணன் நேற்று எதிரணியுடன் இணைந்துள்ளார்.
ஏற்கனவே, ஆளும்கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான பெருமாள் இராஜதுரை, நவீன் திசநாயக்க ஆகியோர் ஐதேகவில் இணைந்து விட்டனர்.
இதனால், தற்போது, அமைச்சர்கள் ஆறுமுகன் தொண்டமான், சி.பி.இரத்நாயக்க ஆகியோர் மட்டுமே ஆளும்கூட்டணியில் எஞ்சியுள்ளனர்.
அதேவேளை, ஐதேகவில் போட்டியிட்டு வெற்றி பெற்று அரசதரப்புடன் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.திகாம்பரம் நேற்று மீண்டும் எதிரணியுடன் இணைந்துள்ளார்.
இதையடுத்து, தற்போது நுவரெலிய மாவட்டத்தில் உள்ள மொத்தமுள்ள 7 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 4 பேர் எதிரணியின் பக்கம் உள்ளனர்.
அதேவேளை, ஐதேக பட்டியலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிறிரங்கா தனியாக இயங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது நிலைப்பாட்டை வெளியிடவில்லை.