மைத்திரியை இன்று நேரில் சந்திக்கிறார் மகிந்த
அரசாங்கத்துக்குள் இருந்து வெளியேறிய பின்னர், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், எதிரணியின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவும், இன்று முதல் முறையாக நேருக்குநேர் சந்தித்துப் கொள்ளவுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்காக, இன்றுகாலை மகிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவும், ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்துக்கு வருகை தருவர்.
இதன்போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றாக இருந்த இவர்கள் இருவரும் எதிரெதிர் வேட்பாளர்களாக சந்தித்துக் கொள்ளவுள்ளனர்.
கடந்த மதம் 23ம் நாள் மைத்திரிபால சிறிசேன எதிரணியின் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக அறிவித்த பின்னர், மகிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வது இதுவே முதல்முறையாகும்.
அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இருவரும், வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த பின்னர், ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக் கூறி, கைகுலுக்கிக் கொள்வது, கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு மரபாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.