வேட்புமனுவில் கையெழுத்திட்டார் மைத்திரி – 19 வேட்பாளர்கள் போட்டி
சிறிலங்காவில் வரும் ஜனவரி 8ம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக 19 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக, தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று நண்பகலுடன் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலஎல்லை முடிவுக்கு வந்ததையடுத்து, 19 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளது உறுதியாகியுள்ளது.
கட்டுப்பணம் செலுத்தியவர்களில் இருவர் சுயேட்சையாகப் போட்டியிடவும், ஏனைய 17 பேரும் அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
நாளை காலை 9 மணிக்கும் 11 மணிக்கும் இடையில் ராஜகிரியவில் உள்ள தேர்த்ல் செயலகத்தில் வேட்பாளர்கள் நேரடியாகச் சென்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
இதனையொட்டி கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிடவுள்ள எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, இன்று காலை வேட்புமனுவில் கையெழுத்திட்டார்.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜேதாச ராஜபக்ச, ராஜித சேனாரத்ன, அத்துரலியே ரத்தன தேரர் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.