மேலும்

மகிந்த மீண்டும் போட்டியிடுவதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்யக் கோரி, சிறிலங்கா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய சிங்கள பௌத்த மக்கள் கட்சியின் சார்பில், ரத்தன பண்டார என்பவர் இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கை நேற்று தாக்கல் செய்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரண்டு முறை அதிபராகப் பதவி வகித்தவர் என்றும், அவர் மூன்றாவது முறை அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

18வது அரசியலமைப்புத் திருத்தம், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், பொதுமக்களிடம் அதுகுறித்து கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

அரசியலமைப்பின் படி, இதுகுறித்து கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

எனவே, 18வது திருத்தச்சட்டத்துக்கு அமைய, மூன்றாவது தடவை போட்டியிடுவதில் இருந்து மகிந்த ராஜபக்சவைத் தடை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *