யாழ்.படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ் – “வெள்ளைவான் கடத்தல் சூத்திரதாரி”
யாழ்ப்பாண படைகளின் தலைமையக கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் உதய பெரேரா நேற்று அவசரமாக கொழும்புத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர், ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தலைமையிலான, பாதுகாப்பு அதிகாரிகளின் தலைமையகத்தின் அதிகாரிகளுக்கான பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் பாதுகாப்புக் கெடுபிடிகள் உச்சமடைந்துள்ள நிலையில், மேஜர் ஜெனரல் உதய பெரேரா கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் நம்பிக்கைக்குரியவரும், அவருக்கு நெருக்கமானவருமான மேஜர் ஜெனரல் உதய பெரேரா சிறிலங்கா அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தேர்தல் நோக்கங்களுக்காகவே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதற்கடையே, யாழ்.படைகளின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேலுக்கான துணைத் தூதுவராகப் பணியாற்றிய இவர், வரும் 1ம் நாள் யாழ். படைகளின் தளபதியாகப் பொறுப்பேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ் வரும் டிசம்பர் மாதம் 10ம் நாள் தொடக்கம், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியாகவும் பொறுப்பேற்கவுள்ளார்.
மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ் முன்னர் சிறிலங்கா அதிபருக்கான பாதுகாப்பு பிரிவின் தலைவராக பணியாற்றியவர்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்கா இராணுவத் தளபதியின் கீழ் செயற்பட்ட வெள்ளைவான் கடத்தல் குழுவை இவரே நிர்வகித்தார் என்று மனித உரிமை அமைப்புகள் மற்றும் சிங்கள ஊடகங்களால் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.