மாவீரர் நாளை அனுஸ்டிக்க விடமாட்டோம் – பிரிகேடியர் ருவான் வணிகசூரிய
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கோ, மாவீரர் நாளை அனுஸ்டிப்பதற்கோ, சிறிலங்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
“விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடவும், மாவீரர் நாளை அனுஸ்டிக்கவும் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை.
அத்தகைய நிகழ்வுகளுக்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
வடக்கில், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலதிக காவல்துறை அதிகாரிகளும், சிறப்புப்படையினரும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பு.
அதனுடன் தொடர்புடைய செயல்களில் ஈடுபடுவது, பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு விரோதமானது.
தடைசெய்யப்பட்ட இயக்கத்தையோ அதன் தலைவரையோ எவரேனும் கொண்டாடினால், அது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.