பிரபாகரனை மீட்க முயன்றது அமெரிக்கா – சிறிலங்கா குற்றச்சாட்டு
போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மீட்பதற்கு அமெரிக்கா முயற்சி செய்ததாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க,
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்றும் இந்த முயற்சிக்கு அமெரிக்காவும் ஏனைய சில நாடுகளும் தமது எல்லாப் பலத்தையும் பயன்படுத்தின.
ஆனால் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.
ஐ.நா ஊடாகவும், நோர்வே மற்றும் பிரித்தானிய அரசாங்கங்களின் ஊடாகவும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.
ஆனால், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அந்த அழுத்தங்களுக்கு அடிபணியாமல் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் முன்னெடுக்கப்படும் இலங்கைக்கு எதிரான விசாரணைக்கு வழங்கி வந்த ஆதரவை, பாஜக அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இந்தியா விலக்கி விட்டதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.