சிறிலங்கா அதிபர் தேர்தலில் வரிசை கட்டும் இடதுசாரி வேட்பாளர்கள்
சிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் தாமும் வேட்பாளர் ஒருவரை நிறுத்தவுள்ளதாக, சோசலிச சமத்துவக் கட்சி அறிவித்துள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான பாணி விஜேசிறிவர்த்தனவே அதிபர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர், தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காக நீண்டகாலம் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவராவார்.
அதேவேளை, கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவின் தலைமையிலான நவசம சமாஜக் கட்சியின் சார்பாகவும், தமிழ் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
சுந்தரம் மகேந்திரன் என்பவரையே வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகளில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன போட்டியிட்டிருந்தார்.
இதற்கிடையே, ஜனசெத பெரமுனவின் தலைவரான வண.பத்தரமுல்ல சீலாரத்ன தேரரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இவர் ஏற்கனவே 2010ம் ஆண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.