பாப்பரசரின் படங்களை அகற்றுங்கள் – அரசியல் கட்சிகளுக்கு கத்தோலிக்கத் திருச்சபை கண்டிப்பு
சிறிலங்கா அதிபர் தேர்தல் பரப்புரைகளுக்கு பாப்பரசர் பிரான்சிசின் படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று சிறிலங்கா கத்தோலிக்கத் திருச்சபை , அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வரும், ஜனவரி 13ம் நாள் சிறிலங்காவுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், ஜனவரி 8ம் நாள் அதிபர் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இந்தநிலையில், பாப்பரசரின் படங்களைத் தாங்கிய பரப்புரைப் பதாகைகள் நாட்டின் பல்வேறு இடங்களிலும், ஆளும்கட்சியினரால் வைக்கப்பட்டுள்ளன.
இது கத்தோலிக்கத் திருச்சபைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, இன்று கத்தோலிக்கத் திருச்சபையின் பேச்சாளர் வண.சிறில் காமினி பெர்னான்டோ வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
“பாப்பரசர் பிரான்சிசின் பயணத்தை எவரும் அரசியலுக்குப் பயன்படுத்தக் கூடாது.
அதிபர் தேர்தல் பரப்புரைகளில் பாப்பரசரின் படங்களை வெளியிடக் கூடாது.
பாப்பரசரின் படத்துடன் வைக்கப்பட்டுள்ள தேர்தல் பரப்புரைப் பதாகைகள் அகற்றப்பட வேண்டும்.” என்றும் அவர் கோரியுள்ளார்.