அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு பிரகடனத்தில் ஒப்பமிட்டார் மகிந்த
சிறிலங்காவில் அடுத்த அதிபர் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் கையெழுத்திட்டுள்ளார். (3ம் இணைப்பு)
மற்றொரு பதவிக்காலத்துக்கான அதிபர் தேர்தலை நடத்துவதற்குத் தான் விரும்புவதாக, அவர் இன்று பிற்பகல் 1.10 மணியளவில் கையெழுத்திட்ட பிரகடனத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவு சற்றுநேரத்தில் அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறப்பு வர்த்தமானியில் இது பிரசுரிக்கப்பட்டதும், தேர்தல் ஆணையாளர் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வார்.
இரண்டாம் இணைப்பு
அதிபர் தேர்தலை நடத்த விருப்பம் தெரிவித்து, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கையெழுத்திட்ட சிறப்பு வர்த்தமானி அறிவித்தலின் பிரதி தொலைநகல் மூலம், தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரதி தமக்கு கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல் நாள் மற்றும், வேட்புமனுச் சமர்ப்பிக்கும் கால எல்லை குறித்த அறிவிப்பை தாம் இன்று அல்லது நாளை வெளியிடவுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.