எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் கூட்டமைப்பு இன்னும் இணையவில்லை – இரா.சம்பந்தன்
சிறிலங்கா அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணியில், இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ளவில்லை என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிபிசியிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“இன்னமும் சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவில்லை.
எனவே, யாரை ஆதரிப்பது என்பதை முடிவு செய்வதற்கான காலம் இன்னமும் கனியவில்லை.
அதேவேளை, மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிடுவது தொடர்பாக, பொது எதிரணிக்குள்ளேயே இன்னும் சில விடயங்கள் தொடர்பாக இணக்கப்பாடு காணப்பட வேண்டியுள்ளது.
எனினும் பெரும்பாலான எதிரணியினரை உள்ளடக்கிய பொதுக் கூட்டணியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியிருக்கின்றனர்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு அரசாங்கத் தரப்பிலிருந்து வந்திருக்கின்ற அழைப்பையும் பரிசீலிக்காமல் நிராகரிக்க முடியாது.
அவர்களின் செயற்பாட்டில் எமக்கு திருப்தி இல்லாமல் இருந்தாலும் கூட, அவர்கள் ஓர் அழைப்பை விடுக்கின்ற போது நாங்கள் அதுபற்றி சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது.
சிறிலங்கா அதிபர் தேர்தல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி ஆராய்ந்து யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக முடிவொன்றை எடுக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் வேட்பாளரை தீர்மானிக்கின்ற போது, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான, நிரந்தரமான, நடைமுறைப்படுத்தக் கூடிய அரசியல்தீர்வு பற்றியும் மக்களின் அன்றாட தேவைகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் பற்றியும் கருத்தில் கொள்ளப்படும்” என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.