வன்னியில் இரு வாரங்களுக்குள் மூன்று பௌத்த வழிபாட்டுத் தலங்கள் திறப்பு – தீவிரம் பெறும் ஆக்கிரமிப்பு
வன்னியில் சிறிலங்காப் படையினர் நிலை கொண்டுள்ள பகுதிகளில், புதிய பௌத்த வழிபாட்டுத் தலங்களை அமைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு வாரங்களுக்குள் வன்னிப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்று பௌத்த வழிபாட்டுத் தலங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவில் தமிழ்க் கிராமமான நாயாறில் கடந்த ஆண்டு சிறிலங்கா இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட விகாரையில், கடந்த மாதம் 27ம் நாள் பெரியளவில் வழிபாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
குருகந்த விகாரை என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளதுடன், இங்கு வாழும் தமிழ் பௌத்தர்களுக்கானவே இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்காப் படையினரால் கூறப்பட்டுள்ளது.
இங்கு சேருவாவெல சரணகீர்த்தி நாயக்க தேரர் தலைமையில், கடந்த மாதம் 27ம் நாள் நடத்தப்பட்ட பெருமெடுப்பிலான வழிபாட்டில், சிறிலங்கா இராணுவ, கடற்படை உயரதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
அதேவேளை, கிளிநொச்சி படைகளின் தலைமையக கட்டுப்பாட்டுப் பகுதியில், 65வது டிவிசனின் கீழ் உள்ள 7வது ஆட்டிலறிப் படைப்பிரிவினாலும். ஒரு பௌத்த வழிபாட்டுத் தலம் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட வழிபாடுகளை அடுத்து திறந்து வைக்கப்பட்ட இந்த பௌத்த வழிபாட்டுத் தலத்தில் போதி மரக்கன்றும் நாட்டப்பட்டுள்ளது.
மேலும், கிளிநொச்சியில் நிலைகொண்டுள்ள 574வது பிரிகேட் படைப்பிரிவினராலும் மற்றொரு பௌத்த வழிபாட்டுத்தலம் கடந்த 2ம் நாள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இங்கும், அனுராதபுர சிறீ மாபோதி மரத்தின் கிளை ஒன்று நாட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளில் சிறிலங்கா இராணுவ உயரதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும், படையினரும் கலந்து கொண்டுள்ளனர்.
வடக்கில் தமிழர் பகுதிகளில் உள்ள நிலங்களை அபகரிக்கும் சிறிலங்காப் படையினர், தமது இருப்பையும் சிங்களக் குடியேற்றங்களையும் விரிவாக்கிக் கொள்ளும் நோக்கிலேயே பௌத்த வழிபாட்டுத் தலங்களை வேகமாக அமைத்து வருகின்றனர்.