12 கொமன்வெல்த் நாடுகளில் தகைமையற்ற தூதுவர்கள் – சிறிலங்கா அரசு ஒப்புதல்
கொமன்வெல்த் நாடுகளில் பணியாற்றும் சிறிலங்கா தூதுவர்களில், இரண்டு பேர் மாத்திரமே, அந்தப் பதவிக்குத் தகைமையானவர்கள் என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றுத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஐதேக பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
14 கொமன்வெல்த் நாடுகளில் சிறிலங்காவின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்களில் இருவர் மாத்திரமே தகைமை வாய்ந்தவர்கள்.
கென்யாவுக்கான தூதுவர் வி.கிருஸ்ணமூர்த்தி மற்றும், மலேசியாவுக்கான தூதுவர் அன்சார் ஆகிய இருவருமே தகைமை பெற்ற தூதுவர்களாவர்.
அவுஸ்ரேலியா, பங்களாதேஸ், கனடா, இந்தியா, மாலைதீவு, நைஜீரியா, பாகிஸ்தான், செஷெல்ஸ், சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, உகண்டா,மற்றும் பிரித்தானியா ஆகிய 12 நாடுகளில் பணியாற்றுவோர் தகைமைபெற்ற தூதுவர்களல்ல.
இவர்கள் அரசியல் ரீதியாக நியமனம் பெற்றவர்கள்.
இந்த 14 நாடுகளிலும் உள்ள தூதுவர்களுக்காக சிறிலங்கா அரசாங்கம், மாதாந்தம், 12 கோடி 82 இலட்சத்து 74 ஆயிரத்து 744 ரூபாவைச் செலவிட்டு வருகிறது என்றும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.