மேல்முறையீடு செய்தது இந்தியா – மீனவர்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் நம்பிக்கை
ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரணதண்டனைத் தீர்ப்புக்கு எதிராக, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம், சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
ஐந்து மீனவர்களின் சார்பிலும், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தினால், அமர்த்தப்பட்ட சட்டவாளர் அனில் சில்வா இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
மியான்மரின் தலைநகர் நேபிடோவில் வைத்து இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் இந்த தகவலை இன்று மாலை வெளியிட்டார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் மியான்மார் சென்றுள்ள அவர், நேபிடோவில் செய்தியாளர்களிடம் பேசிய போது, மீனவர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது, அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.