மேலும்

சிறிலங்காவில் ஜனவரி 2ம் நாள் அதிபர் தேர்தல்?

அதிபர் தேர்தலை வரும் ஜனவரி 2ம் நாள் நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, வரும் ஜனவரி 8ம் நாள் சிறிலங்காவில் அதிபர் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், பாப்பரசர் பிரான்சிசின் பயணத்தைக் கருத்தில் கொண்டு, அதற்குரிய ஏற்பாடுகளைக் கவனிப்பதற்குப் போதிய கால இடைவெளியைப் பெற்றுக் கொள்வதற்காகவே, ஜனவரி 2ம் நாள் அதிபர் தேர்தலை நடத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பாப்பரசர் பிரான்சில் சிறிலங்காவில் வரும் 13ம் நாள் தொடக்கம், மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சிறிலங்காவில் அதிபர் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டால், அது பாப்பரசரின் பயணத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்பட்டது.

இதனால், முன்கூட்டியே அதிபர் தேர்தலை நடத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

ஜனவரி 8ம் நாள் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டால், ஜனவரி 13ம் நாள் பாப்பரசர் கொழும்பு வருவதில் இடையூறுகளை ஏற்படுத்தலாம் என்று கத்தோலிக்கத் திருச்சபை வட்டாரங்களில் கவலை நிலவியது.

தேர்தல் முடிவுகளில் தாமதமோ, இழுபறியோ ஏற்பட்டால், குறிப்பாக, மீள்வாக்கு எண்ணிக்கை நடக்கும் சூழல் உருவானால் அது பாப்பரசரின் பயணத்துக்கான பாதுகாப்பு ஒழுங்குகளைப் பாதிக்கும் என்று வத்திக்கான் கவலை கொண்டிருந்தது.

இதனைக் கருத்தில் கொண்டே, ஜனவரி 2ம் நாளுக்கு தேர்தலை நாளை முன்தள்ளி வைக்க சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனால், வத்திக்கானின் பயணத்திட்டத்தில் மாற்றங்கள் இருக்காது என்றும் சிறிலங்கா அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

முன்னதாக, வரும் ஜனவரி 8ம் நாள் தேர்தலை நடத்தி சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அதிஸ்டமாக அமையும் என்று அவரது சோதிடர்கள் ஆலோசனை கூறியிருந்தனர்.

எனினும், தற்போது ஜனவரி மாதத்தில், 23ம் நாள் வரை எந்த நாளில் தேர்தலை நடத்தினாலும், அவருக்கு வெற்றி கிடைக்கும் என்றும் சோதிடர்கள் அறிவுரை கூறியுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *