மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் சார்பில் இந்திய அரசு நாளை மேல்முறையீடு
போதைப்பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, கொழும்பு மேல்நீதிமன்றினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களின் சார்பிலும், இந்திய அரசு நாளை சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மீனவர்கள் சார்பில் வாதிடுவதற்காக மிகச்சிறந்த சட்டவாளர்களை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் நியமித்துள்ளது.
சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் மீனவர்கள் சார்பில் மேல்முறையீடு செய்வதற்கான சட்டசெலவுகளுக்காக தமிழ்நாடு அரசு 20 இலட்சம் ரூபாவை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு அனுப்பியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு கச்சதீவுக் கடலில் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் ஐந்து பேரும், 995 கிராம் போதைப்பொருளை வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த மாதம் 30ம் நாள் கொழும்பு மேல் நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.