விராலிமலை ஆசிரமத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன்
சென்னையில் நாளை நடைபெறவுள்ள கே.ஜி.கண்ணபிரான் நினைவு நிகழ்வில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நேற்றிரவு திருச்சி அருகேயுள்ள பிரேமானந்தா ஆசிரமத்தில் தங்கியுள்ளார்.
சென்னையில் இருந்து, நேற்றுமாலை திருச்சி அருகேயுள்ள விராலிமலையில், உள்ள பிரேமானந்தா ஆசிரமத்துக்குச் சென்ற அவர், அங்குள்ள சிவன் ஆலயத்தில் தரிசனம் செய்து விட்டு நேற்றிரவு அங்கு ஓய்வெடுத்தார்.
பிரேமானந்தா ஆசிரமத்தில் நடைபெறும் பௌர்ணமி வழிபாட்டில், ஆண்டுக்கு ஒருமுறை சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்வது வழக்கம் என்றும், வடக்கு மாகாண முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தற்போது தான் முதல் முறையாக அவர் ஆசிரமத்துக்கு வந்துள்ளார் என்றும் ஆசிரம நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் வருகையை முன்னிட்டு, ஆசிரம வளாகத்தைச் சுற்றி வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுத்தப்பட்டிருந்தனர்.
நேற்றிரவு ஆசிரமத்தில் தங்கி ஓய்வெடுத்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று காலை சென்னைக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
அதேவேளை, நேற்றுக்காலை சென்னை விமான நிலையத்தை சென்றடைந்த சி.வி. விக்னேஸ்வரன், செய்தியாளர்களைச் சந்திக்காமல் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.