ஐ.நாவுக்கு சாட்சியமளிப்போரை கண்காணிக்க கிராமங்களில் அலையும் புலனாய்வாளர்கள்
சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, உள்ளூர் விசாரணைகளில் சாட்சியம் அளித்தவர்கள் ஐ.நா மனித உரிமை ஆணயாளர் பணியகம் நடத்தும் விசாரணைகளுக்குச் சாட்சியம் அளிக்க முடியாதவாறு அச்சுறுத்தப்படுவதாக, நீதி மற்றும் சமாதானத்துக்கான அமைப்பின் தலைவர் அருட்தந்தை மங்களராஜன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா விசாரணைக்கு வாக்குமூலம் அளிப்பவர்களைக் கண்டறிவதற்காக கிராமங்கள் தோறும் சிறிலங்கா அரசாங்கப் புலனாய்வாளர்கள் இயங்குவதாகவும், அதனால் மக்கள் அச்சம் அடைந்திருப்பதாகவும் அவர் பிபிசிக்குத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்தும் விசாரணைகளில் சாட்சியமளிக்க விரும்புவர்களை சிறிலங்கா அரசாங்கம் தடுத்தும், மிரட்டியும் வருவதாக, ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசேன் நேற்று அறிக்கை ஒன்றில் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.