கொழும்பில் நீர்மூழ்கி தரித்திருப்பது வழக்கத்துக்கு மாறானதல்ல – என்கிறது சீன பாதுகாப்பு அமைச்சு
சீன நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்பது வழக்கத்துக்கு மாறான ஒன்றல்ல என சீன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்றும், போர்க்கப்பல் ஒன்றும் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ள நிலையில், இதுகுறித்து இந்தியா கவலை தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், பெய்ஜிங்கில் இன்று சீன பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ளார்.
“கடற்படை நீர்மூழ்கிகள், எரிபொருள் நிரப்பவும், மாலுமிகள் ஓய்வெடுக்கவும், வெளிநாட்டுத் துறைமுகங்களில் தரித்து நிற்பது வழக்கமான அனைத்துலக நடைமுறை தான்.
சோமாலியாவுக்கு அப்பால் ஏடன் வளைகுடாவில், கடற்கொள்ளையருக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட சீன நீர்மூழ்கியே கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கிறது” என்றும், சீன பாதுகாப்பு அமைச்சு அதிகாரி தெரிவித்துள்ளார்.