சிறிலங்கா விவகாரத்தில் மீண்டும் எரிக் சொல்ஹெமுக்கு இடமில்லை – மங்கள சமரவீர
சிறிலங்கா விவகாரத்தில் நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா விவகாரத்தில் மீண்டும் எரிக் சொல்ஹெய்ம் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று நேற்று வெளியிட்ட தலைப்புச் செய்தி குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள மங்கள சமரவீர,
“லண்டனில் நடந்த முதல்நாள் கலந்துரையாடலில் எரிக் சொல்ஹெய்ம் குறுகிய நேரமே கலந்து கொண்டிருந்தார்.
அதுவும், புலம்பெயர் இலங்கையர்களுடனான தனது கடந்தகால அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதே நோக்கமாகும்.
அவர் தனிப்பட்ட முறையிலேயே இதில் பங்கேற்றார், நோர்வே அரசின் பிரதிநிதியாக கலந்து கொள்ளவில்லை.
சிறிலங்காவின் எல்லா விவகாரங்களிலும் எரிக் சொல்ஹெய்ம் நிச்சயமாக எந்தப் பங்கையும் வகிக்கவில்லை. எதிர்காலத்திலும் அவர் எந்தப் பங்கையும் வகிக்கமாட்டார்.
ஆனாலும், புலம்பெயர்ந்தோருடனான அவரது ஈடுபாடு மற்றும் கடந்தகால அனுபவங்கள் மிகவும் பயனுள்ளவையாக அமைந்தன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.