செப்ரெம்பருக்கு முன் உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்க வேண்டும் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான சிறிலங்கா அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறை, வரும் செப்ரெம்பர் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடருக்கு முன்னர் உருவாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வலியுறுத்தியுள்ளார்.
ஜெனிவாவில் இன்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29வது அமர்வில், நிகழ்த்திய ஆரம்ப உரையின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில், ‘சிறிலங்காவின் புதிய அரசாங்கம், அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீளப் புதுப்பிக்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக நம்பகமான பொறிமுறைகளை உருவாக்கும் போது, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக, சிறிலங்கா அதிகாரிகளுடன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையம், தொடர்ந்து கலந்துரையாடல்களில் ஈடுபடும்.
இந்தப் பொறிமுறை வரும் செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர், உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.
அரசியல் கட்சிகள், சிவில் சமூகத்துடன் பரவலான ஆலோசனைகளை நடத்தவும், பாதிக்கப்பட்ட அனைவரதும், அவர்களினது குடும்பங்களினதும் முழுமையான தேசிய ஆதரவை உறுதிப்படுத்தவும், இந்த செயல்முறையைின் உரிமையை உறுதி செய்வதற்கும், சிறிலங்கா அரசாங்கத்தை ஊக்குவிப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.