முன்னாள் போராளி நகுலேஸ்வரன் படுகொலை – மன்னார் ஆயர் கண்டனம்!
மன்னார், வெள்ளாங்குளம் பகுதியில் முன்னாள் போராளியான, கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசெப் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
“கொடிய போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்த ஆயுததாரிகள் முயற்சிப்பதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளரான நகுலேஸ்வரன் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நாட்டில் இன்று நீதி தோற்றுப் போய்விட்டது.
நீதிக்குப் புறம்பான செயல்கள் தான் தற்போதைய ஆட்சியில் நடைபெறுகின்றன.
இந்நிலையில், ஆயுததாரிகளும் தமது அராஜகங்களை சுதந்திரமாக அரங்கேற்றி வருகின்றனர்.
எனவே, சர்வதேச சமூகம்தான் இந்த அராஜகங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
தமிழருக்கு நீதியை – விடுதலையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையும், தமிழீழக் காவல்துறையில் பணியாற்றி, சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டவருமான நகுலேஸ்வரன், நேற்றுமுன்தினம் இரவு தனது வீட்டில் கல் அரிந்து கொண்டிருந்த போது, மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.