பொதுவேட்பாளரை ஆதரிக்க கூட்டமைப்பு விதிக்கும் 3 நிபந்தனைகள்
வடக்கில் இருந்து படைகளை விலக்கவும், சட்டவிரோத காணி அபகரிப்பை நிறுத்தவும், வலிகாமம் வடக்கிலும், சம்பூரிலும் மக்களை மீளக்குடியேற்றவும் தயாராக இருந்தால், சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன்.
படுகொலை செய்யப்பட்ட கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜின் 8வது நினைவு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“குறைந்தபட்சம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க பொதுவேட்பாளர் முன்வந்தால் அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும்.
அது சந்திரிகா குமாரதுங்கவாகவோ, ரணில் விக்கிரமசிங்கவாகவோ, அல்லது கரு ஜெயசூரியவாகவோ இருக்கலாம்.
யாராக இருந்தாலும், வடக்கில் இருந்து படைகளை விலக்கவும், சட்டவிரோத காணி அபகரிப்பை நிறுத்தவும், வலிகாமம் வடக்கிலும், சம்பூரிலும் மக்களை மீளக்குடியேற்றவும் அவர் உறுதி அளிக்க வேண்டும்.
இந்த வாக்குறுதியை யார் வழங்கினாலும் அவரை ஆதரிக்கத் தயார்.
கடந்த அதிபர் தேர்தலுக்கப் பின்னர் சிறிலங்கா அரசாங்கத்துடன் 18 சுற்றுகள் பேச்சு நடத்தினோம்.
சிறிலங்கா அரசாங்கமே அதனை முறித்துக் கொண்டது.
அதனால் தான், இனிமேல் அனைத்துலக கண்காணிப்பின் கீழ் தான் பேச்சுக்களை நடத்த முடியும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் துரிதமாக இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் ஜனநாயகம் கிடையாது.
அதிபர் தேர்தலில் தமக்கு குறைந்தபட்சம் தம்மை ஆதரிக்குமாறு அண்மையில் பசில் ராஜபக்ச கேட்டிருக்கிறார்.
எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கு நாம் பிச்சை கேட்க முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.