ஆயுதப்படைகளிடம் இருந்து காவல்துறை அதிகாரங்களை பறிக்க சிறிலங்கா அரசு முடிவு
ஆயுதப்படைகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரங்களை, மீளப் பெற்றுக்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், காவல்துறை அதிகாரங்களை ஆயுதப்படைகளுக்கு வழங்கும், உத்தரவை நீக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த உத்தரவை நீடிப்பது அவசியமற்றது என்று, சிறிலங்கா அரசாங்கத்தின் 100 நாள் செயற்திட்டம் கண்டறிந்துள்ளதாக, சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரால் கட்டுப்படுத்தப்பட முடியாத தீவிரமான சூழ்நிலைகளில், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கு, ஆயுதப்படைகள் அழைக்கப்பட முடியும்.
அத்தகையதொரு தேவை ஏற்பட்டால், ஆயுதப்படைகளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொண்டு வருவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், ஆயுதப் படைகளுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்கும் வர்த்த்மானி அறிவிப்பு முன்னைய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டு வந்தது.
அதனை தற்போதைய அரசாங்கமும், நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.