செப்ரெம்பருக்குப் பின்னர் சிறிலங்கா மீதான அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?
வரும் செப்ரெம்பர் மாதத்துக்குப் பின்னர், சிறிலங்கா தொடர்பாக எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து அமெரிக்கா இன்னமும் தீர்மானம் எதையும் எடுக்கவில்லை என்றும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு நேற்று மேற்கொண்ட பயணத்தின் முடிவில், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி,
“இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நடத்திய விசாரணை அறிக்கை செப்ரெம்பரில் வெளியிடப்படவுள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வெளியிடப் போகும் அறிக்கையில், என்ன உள்ளது என்று எமக்குத் தெரியாது.
சிறிலங்கா இப்போதிருந்து வரும் செப்ரெம்பருக்கும், எல்லா இலங்கையர்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்கும் என்று நம்புகிறேன்.
செப்ரெம்பருக்குப் பின்னர் என்ன நடக்கும் என்று இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
அனைத்துலக சமூகத்தின் தீவிரமான ஆர்வம் தொடரும் என்பதை என்னால் கூற முடியும்.” என்று குறிப்பிட்டார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில், புதிய அரசாங்கத்தை பாராட்டிய அவர், ஒரு ஆண்டுக்கு முன்னர், தான் இங்கு வந்திருந்தால், கலந்துரையாடல்களை நடத்தியிருக்க முடியாது.
அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படும் ஒவ்வாரு பிரச்சினையும் நிராகரிக்கப்பட்டிருக்கும்.
இப்போது, பிரச்சினைகள் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றைத் தீர்ப்பதற்கு, கூட்டு முயற்சி முன்னெடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.