நேபாளத்திற்கு 1 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குகிறது சிறிலங்கா
கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்தில் நிவாரணப் பணிகளைச் செயற்படுத்துவதற்காக 1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின் பேரில் நேபாளத்திற்கு இந்த நிதியை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த இயற்கை பேரழிவால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது வருத்தத்தை வெளிப்படுத்திய சிறிலங்கா அதிபர், சிறிலங்கா அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக நேபாள அரசாங்கத்திற்கும், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கும் நேபாளத்திற்கும் இடையில் நிலவி வரும் நீண்டகால நட்புறவையும் சகோதரத்துவத்தையும் நினைவு கூர்ந்த அவர், இதுபோன்ற சவாலான காலங்களில் சிறிலங்கா எப்போதும் நேபாளத்துடன் துணை நிற்கும் என்றும், இந்த நிதியுதவி வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களின் அவசர மனிதாபிமான மற்றும் நிவாரணத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
