அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர் சிறிலங்கா வருகை
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் எஸ். போல் கபூர், மூன்று நாள் பயணமாக நேற்று சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி வரை அவர் சிறிலங்காவில் தங்கியிருப்பார் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
போல் கபூர், சிறிலங்காவில் தங்கியிருக்கும்போது, இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துதல், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்தியத்தில் பகிரப்பட்ட முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்லுதல் ஆகியன குறித்து, மூத்த அரசாங்கத் தலைவர்கள், தனியார் துறை நிர்வாகிகள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
இந்தப் பயணம், அமெரிக்காவின் செழிப்பையும் பாதுகாப்பையும் மேம்படுத்தும் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கும், இந்தியப் பெருங்கடலின் முக்கிய பங்காளியான சிறிலங்காவுடனான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்குமான, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொண்டுள்ள உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது என்றும் அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
