இலங்கையரை மீட்க இந்திய உதவியை நாடியது சிறிலங்கா
ஈரானில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களைக் கருத்தில் கொண்டு, ஈரானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அங்குள்ள இலங்கையர்களை வெளியேற்றுவதற்கு, உதவுமாறு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு, கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மூலம், இந்திய வெளியுறவு அமைச்சுடன் தொடர்பு கொண்டுள்ளது.
ஈரானில் இருந்து எல்லை தாண்டிச் செல்லும் இலங்கையர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவுவதற்கு இந்தியா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இரு நாடுகளின் இராஜதந்திர தூதரகங்களும் இந்த விடயத்தில் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேவேளை, இந்தியா ஏற்கனவே ஒப்பரேசன் சிந்து என்ற பெயரில், தனது நாட்டவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளது.
110 இந்திய மாணவர்களைக் கொண்ட முதல் குழு வடக்கு ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்டு, ஆர்மீனியாவில் இருந்து, புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.