உடன்படாவிடின் கடும் விளைவுகள் ஏற்படும் – சுதந்திரக் கட்சிக்கு மொட்டு எச்சரிக்கை
அதிபர் தேர்தல் தொடர்பாக தங்களுடன் ஒரு புரிந்துணர்வை எட்டாவிட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சிறிலங்கா சுமதந்திரக் கட்சிக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேம ஜயந்தவும், மகிந்தானந்த அளுத்கமகேயும், இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
“உடன்பாட்டை இறுதி செய்வதற்கான நேரம் விரைவாக கழிந்து கொண்டிருக்கிறது.
2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 95 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
2018 ஏப்ரலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சி அணியில் 36 உறுப்பினர்கள் இருந்தனர்.
அதற்குப் பின்னர் 22 பேராக இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை, சரத் அமுனுகமவும், மோகன் லால் கிரேரோவும் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்த பின்னர் 20 ஆக குறைந்தது.
அவர்களில் 6 பேர் இப்போது ஐதேகவுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.
இப்போது 14 ஆக உள்ள சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில், பெரும்பாலானோர் வேட்புமனுக் கோரப்பட்டதும், கோத்தாபய ராஜபக்சவின் பக்கம் வந்து விடுவார்கள்.
இதனால் சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 ஆக குறைந்து விடும்.
ஜேவிபி மற்றும் அதிலிருந்து பிரிந்த தேசிய சுதந்திர முன்னணியை விட சிறிய கட்சியாக அது மாறி விடும்.” என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.