நாடுகளை இழுக்க சீனாவும் இந்தியாவும் பனிப்போர் – மாலைதீவு முன்னாள் அதிபர்
நாடுகளைத் தமது பக்கத்துக்கு இழுத்துக் கொள்வதற்காக, இந்தியப் பெருங்கடலில் சீனாவும் இந்தியாவும் பனிப்போரில் ஈடுபட்டுள்ளதாக மாலைதீவின் முன்னாள் அதிபர் மொகமட் நசீட் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அவர்,
“நான் இந்த உண்மைகளை மறைக்க முயற்சிக்கவில்லை.
மாலைதீவில் சீனாவுக்கு நிறைய நலன்கள் உள்ளன. எனவே மாலைதீவில் தனது நலன்களை காப்பாற்றிக் கொள்வதற்கு, தற்போதைய அதிபர் அப்துல்லா யமீன் தொடர்ந்து பதவியில் இருப்பதையே சீனா விரும்புகிறது.
மாலைதீவில் நாளை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் யமீன் வெற்றி பெற முடியாது. எனினும் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள யமீன் முயற்சிப்பார்.
அதிபர் தேர்தலுக்குப் பின்னர் யமீனுக்கு அனைத்துலக சமூகம் அங்கீகாரம் அளிக்கக் கூடாது” என்றும், சிறிலங்காவில் தஞ்சமடைந்துள்ள மாலைதீவின் முன்னாள் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாலைதீவில் நாளை நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் அதிபர் யமீனை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக, இப்ராகிம் மொகமட் சோலி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.