தேர்தலுக்குப் பின் அமைச்சரவை மாற்றம் – நிதி அமைச்சு கைமாறும்?
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் நாள் நடக்கவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர், அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
பொருளாதார முன்னேற்றங்களை துரிதப்படுத்தும் நோக்கில் சிறிலங்கா அதிபர் இந்த அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்வார் என்றும் அவர் கூறினார்.
நிதி, திட்டமிடல் மற்றும் கைத்தொழில் அமைச்சுக்களின் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
நாட்டின் நிதி முகாமைத்துவத்தை தாம் பொறுப்பேற்றுக் கொள்ளவிருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசியல் கூட்டம் ஒன்றின் உரையாற்றியிருந்த நிலையில், இந்தக் கருத்தை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன வெளியிட்டுள்ளார்.