‘ஒப்பரேசன்-2’ ஆரம்பம் – என்கிறார் மைத்திரி
மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பான தனது இரண்டாவது கட்ட நடவடிக்கை (ஒப்பரேசன்-2) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எல்பிட்டியவில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக பிணைமுறி மோசடி குறித்த ஆணைக்குழுவை அமைத்து, அறிக்கையைப் பெற்றுள்ளதாகவும், இரண்டாவது கட்டமாக அறிக்கையின் அடிப்படையில், சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக அதனை சட்டமா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிணைமுறி மோசடி விவகாரத்தினால் கூட்டு அரசாங்கத்துக்குள் விரிசல்கள் எழுந்துள்ள சூழலிலேயே இரண்டாவது கட்ட நடவடிக்கையை தாம் ஆரம்பித்துள்ளதாக சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.